களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 3: மோஹினி - 2

"சரிம்மா சரிம்மா.. அதான் கொடுத்துடுறேன்னு சொல்றேன்ல.."

"வந்து தொலை.." என்று லீலா அவனை காட்டு வழியாக அழைத்துச் சென்றாள். போகும் வழியில் "ப்பா.. இவ்வளோ தூரம் தூக்கிட்டு வந்தியா என்னைய? பலசாலிதான்!" என்று சஞ்சய் சொல்ல கைமுட்டியால்  நெஞ்சில் குத்தினாள். 

"ஆவ்.." 

Jaguar காரை நெருங்கியபோது லீலா, "பாரு என்ன நிலமைல இருக்குனு. சொன்னபடி கேட்டு hospital போயிருந்தோம்னா உன் காயத்துக்கு மருந்தும் கிடைச்சிருக்கும் இந்நேரம் Santa Feக்கும் போய் சேர்ந்திருக்கலாம்."

"இப்போ என்ன? நான் நல்லாத்தானே இருக்கேன். வலியும் குறைஞ்சிருக்கு."

"அது ஏதோ நாட்டு மறுந்துபோல temporaryயா போட்டுவிட்டது. Septic ஆனா எவ்வளோ complications வரும் தெரியுமா? Septicemia வந்தா..."

"அது யார் மாமியா?"

"சஞ்சூ..."

"Sorryy…" என்று காதுகளை பிடித்துக் காட்டினான் சஞ்சய். "இந்த caseசை அப்புறமா deal பண்ணலாம். OK?" சஞ்சய் திறந்து கிடந்த அந்த காரினுள் நுழைந்தான்.

"அதெல்லாம் தெரியாது. அடுத்து நாம hospitalதான் போறோம்" என்றாள் லீலா கைகளை கட்டிக்கொண்டு.

'இங்கதானே விழுந்திருக்கும்...' காரின் இருக்கையின் கீழே நன்றாக துழாவித் தேடினான். "ஏம்மா Elizabeth கூட இவளோ strictடா இல்லம்மா... என்னா அடம்?! சின்னப்புள்ளை கூட தோத்துடும்."

"Excuse me! நான் சின்ன புள்ளைதான்.. இங்க பெண்கள் ஆட்சிதான் நடக்கும்."

"இது US, மறந்துடுச்சா? இதுவரை பெண்ணாட்சி இல்லை. ஆ ஸ்ஸ்...."

"Hey.." ஓடிச்சென்று மெதுவாக சஞ்சய்க்கு வெளிவர உதவினாள் லீலா. "என்ன? என்னாச்சு?" கருணையோடு அவன் காயத்தை நோக்கினாள். 

சஞ்சய் காரின் மீது சாய்ந்துக் கொண்டு, "இல்ல சும்மா.. ராணிக்கு இரக்கம் வருமான்னு test பண்ணேன்" என்றான். ஒருவாறு முறைத்து அவனது சட்டையை ஒருகையால் பிடித்துக் கொண்டாள் லீலா. மறுகையை துப்பாக்கியைப்போல மடக்கி அவன் நெற்றிப்பொட்டில் வைத்து, "இந்த விளையாட்டெல்லாம் மற்ற பொண்ணுங்க கிட்ட வச்சிக்க. நான் ராணி… குட்டிராணி. OK?" என்றாள்.

"ஐயோ பயமாயிருக்கு... மன்னிச்சுடுங்க ராணி" தலைதாழ்த்தி தன் சட்டையை பிடித்திருந்த கையை முத்தமிட்டான். "Oh sorry… குட்டிராணி" என்று பெரிதாக சிரித்து. 'என்ன சிக்கலில் இருக்கின்றோம்.. அதை மறந்து இவளுடன் தனியே குழந்தைப்போல் ஆகின்றேனே?' என்று தானே வியந்துக் கொண்டான் சஞ்சய்.

இருவரும் இப்படி பேசிக்கொண்டிருக்க நெடுஞ்சாலையில் வாகனம் வரும் ஓசைக்கேட்டது. சஞ்சய்யின் முகத்தில் சிரிப்பு மறைய, லீலா திரும்பிச் சாலையை நோக்கினாள் இடுப்பில் கைவைத்துக் கொண்டு. ஒரு பழைய மஞ்சள் மாருதி வண்டி வந்து நின்றது. லீலா நின்ற தோரணையைப் பார்த்து சஞ்சய் வரவழைத்துக் கொண்ட சக்தியுடன், "குட்டிராணி  செல்வாக்கு என்னிடம் மட்டும்தான். அவங்களுக்கில்லை" என்று லீலாவின் காதில் சொல்லி அவளை சற்று தள்ளியிருந்த ஒரு தடித்த மரத்திற்குப் பின்னால் இழுத்துச் சென்றான்.

கதவுகள் திறந்து ஆட்கள் இறங்கும் சத்தம் கேட்டது. லீலா, "ஏன்? என்னால சமாளிக்க முடியாதா?" என்று குரல் உயர சஞ்சய் 'மெல்ல மெல்ல' வென சைகை செய்தான்.

"அந்த dummy துப்பாக்கியை வச்சியா?" என்று சத்தமில்லாமல் சிரித்தான்.

அவள் முஷ்டி மடக்கி தன்னை குத்த வர தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டு, அவன் அவள் கையை நெஞ்சோடு அணைத்து வாயில் விரல் வைத்து "ஷ்ஷ்ஷ்" என்றான்.

"அண்ணே இங்க பாம்பெல்லாம் இருக்குமாண்ணே?" என்றான் விக்கி மண்ணில் கிடைத்த சருகுகளின் மேல் மெல்ல கால் வைத்து.

"ஷ்ஷ்ஷ்" என்றான் அகிலன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.

"என்னண்ணே நீங்களும் பாம்பு போல sound தரீங்க.." காரின் முன்னாள் சென்று நின்றான். வலப்பக்கம் மட்டும் மரத்தின் உதவியோடு நின்று கொண்டிருந்தது கார். "அண்ணே! பயங்கர அடி... உசுரோட இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?"

அகிலன் காரின் மீது கைவைத்து உள்ளே பார்த்தான். இருக்கைகளில் ரத்தக்கறை இருந்தது. திறந்திருந்த கதவிலும், மண்ணில் கிடந்த சருகுகளிலும் ரத்தம் படிந்திருந்தது. அவன் யோசித்து நின்றிருப்பதை பார்த்து, "என்னண்ணே யோசிக்கிறீங்க?" என்றுக் கேட்டான் விக்கி.

"அவங்க இங்கதான் இருக்கணும். இந்த ரத்தக்கறை வேற எங்கேயாவது இருக்கானு பாரு."

"சாகலையா அவங்க..?" என்று சருகுகளை நோக்கினான்.


சுற்றி நின்ற மரங்களை மெதுவாக பார்த்துக்கொண்டு, "ஏன்? இப்போ நம்மள கூட பார்த்துட்டு இருக்கலாம்" என்று முதுகிலிருந்து துப்பாக்கியை எடுத்தான்.

ரத்தம் வழிந்த இடங்களை தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த விக்கி, "ஏது?" என்று ஓடி வந்து அருகில் நின்றுகொண்டான். "அண்ணே அவங்க கிட்டேயும் துப்பாக்கி இருக்குமா?"

"இருக்கலாம்.." எங்கிருந்தோ குயில் கத்த, தன் துப்பாக்கியை இழுத்து பிடித்தான். துப்பாக்கியோடு சுற்றித் திரும்ப, அகிலனின் கை விக்கியை அறைந்தது. 

"அம்மா...!"

அதிர்ந்துப் போன அகிலன் துப்பாக்கியை விடுவித்து, "என்னடா இங்க நிக்குற? உன்னைய போய் ரத்தக்கறை இருக்கானு பார்க்கச் சொன்னேன்ல. போடா"

"இல்ல… அவிங்க துப்பாக்கி..."

"உன் துப்பாக்கி எங்க?

"வண்டில வச்சுட்டேன் அண்ணே..."

அகிலன் அவனைப் பார்த்து, "உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு..."

"ஹிஹி sorry bro.."

"ச்சை நட!"

விக்கி அகிலனை அழைத்துக் கொண்டு கடைசியாக அவன் நின்ற இடத்திற்கு வந்தான். அங்கிருந்து மெதுவாக நடந்தான் அகிலன். 
சருகு மிதிபடும் ஓசை கேட்டு நின்றான். 'விக்கி.' மீண்டும் காரைப் பார்த்தான். பின்னால் நின்ற மரங்களை நோட்டம் விட்டான். 'விக்கிதான்.

காரின் அருகே அதிகமாக ரத்தம் சிந்தியிருந்து. அங்கிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சிந்தியிருந்தது. பின்பு அவ்வளவாக கண்களுக்கு புலப்படவில்லை. 'ஆழமான காயம்தான். ஆனால், இருவருக்கும் காயமாக இருக்குமா? இல்லை. ஒருவரை இன்னொருவர் தூக்கி சென்றிருப்பர். நேற்று அவன் மேல் பாய்ந்த குண்டு? அவன் இறந்திருந்தால் இங்குதான் அவளும் இருக்கவேண்டும்.

அதேநேரத்தில் விக்கி மண்ணை கவனித்துக் கொண்டே காட்டுக்குள் சென்று கொண்டிருந்தான். இரண்டு அடி தூரத்தில் சருகுகளின் இடையில் ஏதோ மின்னியது. அது என்னவாக இருக்கும் என்று அமர்ந்து உற்றுப் பார்த்தான்.


'மரணத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டுதான் செல்லவேண்டும். பரிவு கொண்டு வேலையை விட்டுவிடாதே, அகிலா!' தன் எண்ணத்தை பார்த்து வியந்து நின்றான். "பரிவா?"

வனத்தில் எதிரொலித்தது குரல், "அண்ணே!!"

களவாடப்படும்...

Comments